செம்மணி மூலம் வெளிவரும் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டும் : ஐ.நாவிடம் இருந்து முக்கிய அறிக்கை
செம்மணி மனித புதைகுழிக்கான என்னுடைய விஜயம் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்திற்கும் முழுமையான சுயாதீன விசாரணைக்குமான காண்புநிலையையும் அவசரத்தையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் சிவில் சமூகத்தினரும், மதத் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும், மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பிவைத்த கடிதத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கை இடம்பெற்றிருக்கும் எனவும் வோல்க்கெர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமை
அந்தக் கடிதத்தில், இலங்கைக்கான எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள், உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள், சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்தப் பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என கூறியுள்ளார்.
என்னுடைய இந்த விஜயங்கள் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்திற்கும் முழுமையான சுயாதீன விசாரணைக்குமான காண்புநிலையையும் அவசரத்தையும் வழங்கும் எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதுவரை சுயாதீனமான, வலுவான, நியாயமான பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை ஏற்படுத்த தவறிவிட்டதுடன் முழுமையான சர்வதே தராதரங்களை எட்டுவதற்கு தவறிவிட்டனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
