சிறிலங்கா காவல்துறையின் சித்திரவதை அம்பலம் - ஐ.நாவின் பொறிக்குள் சிறிலங்கா!
தமிழீழ விதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச சிவில் மனித உரிமைப் பட்டயத்தின் நெறிமுறையின் (Optional protocol) கீழ், ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு முன்பாக சட்ட நடவடிக்கை ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2014ஆம் ஆண்டு ஆரம்பித்து இருந்தது.
இச்சட்ட நடவடிக்கைக்கு ராஜா வழக்கறிஞர் (King’s Counsel ஜெஃப்ரிறொபேர்ட்ஸன் (Geoffrey Robertson) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சார்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறிலங்காவிற்கு எதிரான நடவடிக்கை
இவ்வாறான நிலையில், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஒரு மாதமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் சுவிற்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்ற தமிழீழ விதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி தொடர்பான சட்ட நடவடிக்கையில் பங்கேற்ற 17 சர்வதேச நீதிபதிகளாலும் சிறிலங்கா அரசாங்கம் கண்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக பலமான தாக்குதல்கள், மின் அதிர்ச்சி, பாலியல் வன்புணர்வு ஆகிய சித்திரவதைகள் சுவிஸ் வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டன. இச்சித்திரவதையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்தபோதிலும், மனித உரிமை ஆணைக்குழு அம்மறுப்பை நிராகரித்தது.
மேலும், குறித்த நபர் இலங்கையிலேயே பயன் தரக்கூடிய உள்நாட்டு தீர்வுகளை நாடி இருக்கலாம் என்ற வாதத்தை மனித உரிமை ஆணைக்குழு நிராகரித்தது.
சித்திரவதைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை
இத்தீர்ப்பு பயன் தரக்கூடிய உள்நாட்டு தீர்வுகள் எதுவும் சிறிலங்காவில் இல்லை என்பதை நிரூபித்துள்ளது. ஆகவே சிறிலங்காவை சுயாதீனமாகவும், காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு பொறுப்பான காவல்துறையினரையும் விசாரணை செய்யுமாறும், அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா, மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு போதுமான நட்டஈட்டை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாமலிருக்க சிறிலங்கா கட்டாயம் தனது சட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
