அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று(10) உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அண்மையில் குறித்த சட்டமூலத்தை எதிர்த்து மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல முக்கிய அமைப்புக்களும், குடிசார் சமூகத்தினர் மற்றும் சில அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் கரிசனைகளை வெளியிட்டு வருகின்றனர்.

சட்டமூலத்தை எதிர்த்து
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் துணை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம குறித்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டமூலத்தின் வரைவை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது மாத்திரமின்றி இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமென மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையிலும் அரசியலமைப்பின் உறுப்புரைகளை மீறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரெஹான் ஜயவிக்ரம தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.