நினைவுச்சின்னங்களை அழிக்க முற்படுபவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது!
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அகற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்ற செய்தி மீண்டும் தமிழ் மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது.
ஈழத் தமிழர்களின் நிலத்தின் மீதான போரும் பண்பாட்டின் மீதான போரும் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் நினைவுகள்மீதான போரும் உக்கிர முகத்தைக் காட்டிக் கொண்டிருப்பதைத்தான் இந்த செய்தி சொல்கிறது.
ஒரு இனத்தை அழிக்க அதன் நினைவுகளை அழிப்பதை ஒரு உபாயமாக இனவழிப்பாளர்கள் கையாள்வதுண்டு.
ஈழத்தில் தமிழ் மக்களின் நினைவுகள்மீது வரலாறு முழுவதும் போர் நடந்திருக்கிறது. மீண்டும் ஈழத் தமிழ் மக்களின் பெருநினைவுகள்மீது ஆயுதங்களை பிரயோகிக்க முயற்சிக்கும் இந்த எண்ணம், சாதாரணமானதல்ல, இதுவொரு போர்.
இனவழிப்பின் சின்னம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றை அமைத்திருந்தனர்.

தமிழ் மக்களின் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் போரில் அதிகம் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பயில்கின்ற பல்கலைக்கழகத்தில் ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் வடுவாகிப் போன முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றை மாணவர்கள் அமைத்தமை மிகவும் இயல்பானதும், அடிப்படை உரிமையுமாகும்.
தெற்கில் அரசிற்கு எதிராக ஆயுத யுத்தம் செய்த ஜே.வி.பிக்கு இவ்வாறு நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவேந்தல்களும் நடக்கின்றன.
அந்த அடிப்படையில் போரால் காயப்பட்ட ஒரு இனம், தனது நினைவுகளை மீட்பதற்காக நினைவுச் சின்னம் ஒன்றை அமைப்பது உலகில் உள்ள எல்லா மக்களும் எதிர்பார்க்கின்ற அடிப்படை உரிமையும், போரின் காயங்களில் இருந்து விடுபட மேற்கொள்ளும் வழியுமாகும்.
அது ஒரு பண்பாட்டு உரிமையாகவும் நினைவேந்தல் உரிமையாகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்த அடிப்படையில்தான் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தாமாக அவ்வாறு ஒரு இனவழிப்பு நினைவுச்சின்னம் ஒன்றை அமைத்து போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அங்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இரவோடு இரவாக அகற்றல்
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட குறித்த நினைவுத் தூபி அழிக்கப்பட்டது.

இரவோடு இரவாக மிகவும் கொடுமையான முறையில் நினைவேந்தல் சின்னம் அழித்து அகற்றப்பட்டது.
போரில் எவ்வாறு கொடுமையாக மக்கள் கொன்றழிக்கப்பட்டார்களோ, அதேபோல அப் போர் குறித்து அமைத்த நினைவேந்தல் சின்னமும் மிகவும் கொடுமையான முறையில் சிதைக்கப்பட்டது.
இது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் வடக்கு கிழக்கு எங்கும் வாழ்கின்ற தமிழர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கினர்.
குறித்த நினைவுச்சின்னத்தை அழித்தமைக்கு எதிராகவும் அதே இடத்தில் மீண்டும் நினைவேந்தல் சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மாணவர்களின் எதிர்ப்பை கண்ட பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைத்து தர இணங்கியது.
துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜாவின் உறுதிமொழியை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை தளர்த்தினர்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க யாழ் பலக்லைக்கழக துணைவேந்தர் சிறி சற்குணராஜா அடிக்கல் நாட்டி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆச்சரியமான விசாரணை
அவ்வாறு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டத்திற்கு முறைப்பாடு வந்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதிபர் செயலகம், காவல் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவரிடமிருந்தும், தனி ஆட்கள் இருவரிடமிருந்தும் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டதில், நிதி கையாளுகை மற்றும் அனுமதிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொஞ்சம் ஆச்சரியமான விடயமாகவே இருக்கிறது. ஈழத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதுமான திரண்டு பல போராட்டங்களை நடாத்துகிறார்கள். பல முறைப்பாடுகளை செய்கிறார்கள். பல ஆணைக்குழுக்களின் முன்பாக சென்று வாக்குமூலங்களை வழங்கி, முறைப்பாடுகளை கொடுத்திருக்கிறார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கான விடுவிப்பு, சர்வதேச விசாரணை, தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு, வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என ஒட்டுமொத்த தமிழர் தேசமே திரண்டு முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் இல்லாது வெறுமை தொடர்கின்ற நிலையில் ஒரு விரிவுரையாளரும் வேறு சிலரும் கொடுத்துள்ள முறைப்பாட்டுக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வேடிக்கையும் ஆச்சரியுமும்தான்.
துணைவேந்தருக்கு எதிரான திட்டமிட்ட நகர்வா?
2021ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அழிக்க அனுமதித்தார் என்ற வகையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறி சற்குணராஜா பெரும் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தார்.

உலகம் முழுவதிலும் இருந்து பல விமர்சனங்களும் கண்டனங்களும் பதிவாகின. மாணவர்களின் பெரும் கொந்தளிப்புக்கும் சீற்றத்திற்கும் அவர் பதில் கூற வேண்டியவர் ஆனார்.
இந்த நிலையில்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்தில் புதிய நினைவுத்தூபியை அமைக்க அடிக்கல் நாட்டியிருந்தார்.
தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்பில் பல்வேறு அதிருப்தி கருத்துக்களை துணைவேந்தர் வெளியிட்டு வந்திருக்கிறார்.
தமிழ் இனத்தின் நிலை குறித்த ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான நிலையில் நினைவுத் தூபியை அழிக்க அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதற்கு விமர்சனங்கள் எழவே செய்யும்.
ஆனால் இப்போது மீண்டும் யாழ்ப்பாண பல்லைக்கழகத்திற்கு துணைவேந்தராக சிறி சற்குணராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்தே இந்த முறைப்பாடு வந்திருக்கிறது என்றும் அவரை துணைவேந்தர் பதவியில் இருந்து அகற்ற மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதி நகர்வு என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி இருந்தால் அதனை நிச்சயமாக எதிர்க்கவும் கண்டிக்கவும் வேண்டும்.
அப்படி செய்யக் கூடிய சில விரிவுரையாளர்கள் பல்கலைக் கழகத்திற்குள் உள்ளனர்தான்.
இனப்படுகொலைப் போர் நடந்த 2009ஆம் ஆண்டு காலத்தில்கூட அத்தகைய ஒரு சில விரிவுரையாளர்களை அக்கால மாணவர் ஒன்றிய செயலாளராக நானும் எதிர்கொண்டு உள்ளேன்.
நினைவுகள்மீதான போரா?
தமிழ் மக்களின் தேசத்தில் இனப்படுகொலையை நினைவுகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிகளை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்பு இலங்கை அரசிடம் இருப்பதையும் இங்கு நாம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் இவ்வாறு முறைப்பாடு கிடைத்திருப்பது என்பதும் அல்லது அந்த முறைப்பாட்டை செய்திருப்பவர்களின் பின்னணியிலும் இந்த நோக்கமும் இருக்க வாய்ப்பு இருக்கின்றது.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைப் போரை மூடி மறைக்கவும் அதன்போது இழைத்த குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்ளவும் இத்தகைய அடையாளங்களை அகற்றவும் அழிக்கவும் ஆளும் அரச தரப்புக்கள் முயல்வதை முகம் கொண்டே வருகிறோம்.
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி முதலில் அழிக்கப்பட்டது அதற்காகவே.
ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலை குறித்த நினைவுகள்மீது கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குவதைப் போல இச் செய்தி அமைந்திருக்கிறது.
இதனை தடுக்க மீண்டும் ஒரு போராட்ட சூழல்கூட தேவைப்படலாம். அத்துடன் இதன் பின்னணிகள் குறித்து சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தேவை யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் உண்டு.
குறித்த நினைவுத்தூபியை சீமென்டால் ஆன நினைவுக் கல்லாக பார்க்காமல் அழிக்கப்பட்டவர்களின் ஆத்மாக்கள் உறைந்த சின்னமாகவே ஈழத் தமிழ் சமூகம் கருதுகிறது.
அந்த ஆத்மாக்களை அழிக்கவே அடக்குமுறையாளர்களின் இந்த முயற்சிகளும் நடக்கின்றன.
இதேவேளை நடந்த போரில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அமைக்கப்பட்ட நினைவுக்கற்களைக்கூட அழிக்க வியூகம் வகுப்பவர்கள் இருக்கின்ற அரசுடன் ஈழத் தமிழ் மக்கள் எப்படி இணைந்து வாழ்வது என்பதையும் இதில் உலகம் பெற்றுக்கொள்ள வேண்டிய செய்தியாக இருக்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.