ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தி நீதித்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
துமிந்த சில்வா தொடர்பான தீர்ப்பு மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறிருக்கையில் அவர் மன்னிப்பு வழங்குவதற்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பதை நாட்டு பிரஜைகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகின்றது.
அதற்கமைய ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படும் கைதிகள் பெயர்ப்பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் எவ்வாறு உள்ளடக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் மன்னிப்பிற்காக தகுதியுடையவர்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு உபயோகிக்கும் மதிப்பீடுகள் எவை? இவர் தொடர்பான தீர்ப்பு மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவ்வாறிருக்கையில் அவர் மன்னிப்பு வழங்குவதற்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பதை நாட்டு பிரஜைகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை கண்மூடித்தனமாக பயன்படுத்தி , நீதித்துறையை தவறாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவை இந்த தீர்மானத்தை எடுக்கும் போது பின்பற்றப்பட்டனவா ?
நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை ஸ்திரப்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் - என்றுள்ளது.