திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத அரச தலைவரும் - செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்!
நாட்டில் திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத அரச தலைவருமே காணப்படுகின்றனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
வவுனியா பாரதிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் ,
"விவசாயிகளின் வயிற்றில் கை வைத்ததால் இன்று அரசாங்கம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
இன்றையை விலைவாசி உயர்வால் சாதாரணமான மக்களுக்கு வருமானம் குறைவாக உள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகமாக காணப்படுகின்றது.
விலை நிர்ணயம் இல்லாமல் போய் விட்டது. தற்போது அறுவடை இடம்பெறும் நிலையில் விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றது. ஒரு திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத அரச தலைவருமாக காணப்படுகின்றனர்.
10 ஏக்கர் விவசாயம் செய்தவர்களை 2 ஏக்கரை இயற்கை முறையில் செய்யுங்கள் என கூறியிருக்கலாம். இல்லையேல் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நெல்லினை 100 ரூபாவுக்கு பெறலாம் என தெரிவித்திருந்தால் ஏதாவது விவசாயிகள் முயற்சி செய்திருப்பார்கள். பழக்கம் இல்லாத விவசாயி இதனை செய்ய முடியாதுள்ளது.
வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்து கடந்த அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்துடன் இருந்த வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.இதனைஅரச தலைவர் திறந்து வைக்கின்றார்.
நாம் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் வரவேற்பு நுழைவாயில் காணப்பட்டது. ஆனால் தற்போது தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது சிங்கள மொழியே தெரியவேண்டுமாம்.
அரசியல் அமைப்பில் தமிழ் சிங்கள மொழிகள் சம அந்தஸ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறுள்ள மொழிக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.
எமது தமிழ் மொழி இல்லாத இடத்திற்கு சென்று கலந்துகொள்வதனை நாம் விரும்பவில்லை. ஆனால் பல்கலைக்கழகமொன்று வரவேண்டும் என்று முயற்சி எடுத்தோம் அது அமைந்துள்ளது.
நாம் மொழிக்காகவும் நிலத்திற்காகவுமே பல போராட்டங்களை செய்தோம். ஆனால் இன்று புறக்கணிக்கப்படுகின்றோம்" என மேலும் தெரிவித்துள்ளார்.