சத்தியலிங்கம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை
வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்தி வவுனியா நகரத்தில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பிலான பாதீட்டு விவாதத்தில் நேற்று (07) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா நகரம் வடக்கிற்கான பிரதான நுழைவாயிலாகும்.
மொத்த சனத்தொகை
நாட்டின் ஏனைய மாகாணங்களையும் வடக்கு மாகாணத்தையும் இணைக்கும் பிரதான கேந்திர நகரமாக விளங்கிவருகின்றது.
மூன்று முக்கிய பிரதான வீதிகள் வவுனியா நகரத்தையே ஊடறுத்துச் செல்லுகின்றன, வவுனியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ இரண்டு இலட்சம் ஆகும்.
இதில் ஏறத்தாள 50 வீதமானவர்கள் நகரப்பகுதியிலேயே வசித்து வருகின்றார்கள். அத்தோடு நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும் நகரினூடாக ஏ9, ஏ29 மற்றும் ஏ30 பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் ஊடறுத்து செல்வதாலும் போக்குவரத்து உட்கட்டுமான வசதிகள் போதாமல் உள்ளது.
குறிப்பாக பிரதான வீதிகளில் அதிகமான வாகனங்கள் பயணிப்பதால் அலுவலக நேரங்களிலும் பாடசாலை நேரங்களிலும் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதுடன் வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன.
பிரதான வீதி
இதனால் பல உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன. எனவே நகரத்தினூடாக பயணிக்கும் பிரதான வீதிகளை அகலப்படுத்துவதுடன் முக்கியமான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகளை (Road Signal Light) பொருத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
வவுனியா நகரத்தை ஊடறுத்துச்செல்லும் கண்டி - யாழ் பிரதான வீதியில் காணப்படுகின்ற மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சுற்றுவட்டம், ஏ29 பிரதான வீதியில் பள்ளிவாசல் சந்தி மற்றும் ஏ30 பிரதான வீதியில் குருமன்காட்டு சந்தி ஆகிய இடங்களில் வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவதற்கான நிதியொதுக்கீட்டினை இவ்வருடத்திற்கான பாதீட்டில் ஒதுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாள 2,500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
அத்தோடு பிரதான வீதியில் ஏற்படும் வாகன நெரிசலில் மாணவர்கள் பாதிக்கப்படாதிருக்க சுயமாக இயக்ககூடிய பாதசாரிகள் கடவைக்கான சமிக்ஞை விளக்கு (Self Operated Pedestrian Crossing Signal Light) பொருத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் மன்னார், வவுனியா மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதி வவுனியா பறையனாலங்குளம் வீதியாகும்.
அதிகமான நிதி
இந்த வீதி 35 கி.மீ நீளத்தினை கொண்டது, இந்த வீதியானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஐ - றோட் திட்டத்தின்கீழ் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகவும் கட்டுமானப்பொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்தமையினால் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட அதிகமான நிதி தேவைப்பட்டமையினால் நிதிபற்றாக்குறை காரணமாக 32 கி.மீ நீளமான வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் மிகுதியாகவுள்ள 03 கி.மீ நீளமான வீதி திருத்தவேலை நிறுத்திவைக்கப்படவுள்ளதாக கேள்விப்படுகின்றோம்.
எனவே, மேற்படி திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவழிக்கப்படாதுள்ள சேமிப்பில் இருந்து 03 கி.மீ வீதியையும் திருத்துவதற்கு நிதியொதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் நெளுக்குளம் - நேரியகுளம் வீதி, பூவரசங்குளம் - செட்டிகுளம் வீதி ஆகியவற்றில் பாலம் அமைக்கப்பட வேண்டிய இடங்களில் பாலம் அமைப்பதனூடாக மழை நேரங்களில் மக்கள் இடையூறின்றி பயணிக்கக்கூடியதாகவிருக்கும்.
புதுக்குளம் - பேயாடிகூழாங்குளம் வீதியில் புதுக்குளம் வான் உள்ள பகுதியில் மழை காலத்தில் பயணிக்கக்கூடிய வகையில் பொருத்தமான பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கோள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்