அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள்! உயரும் பிட்கொயின் - கிரிப்டோ விலைகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரைவில் சமாதான ஒப்பந்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை உலக சந்தைகளில் அதிகரித்துள்ள நிலையில், இன்று கிரிப்டோ நாணயங்களின் விலைகள் உயர்வைக் கண்டுள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய கிரிப்டோ நாணயமான பிட்கொயின் 24 மணிநேரத்தில் 77,500 அமெரிக்க டொலராக(1.6 சதவீதம்) உயர்ந்துள்ளது.
இதேபோல் ஈதர் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
CoinDesk 20 குறியீடு
பரந்த கிரிப்டோ சந்தையை பிரதிபலிக்கும் CoinDesk 20 குறியீடும் 1.56 சதவீதம் அதிகரித்துள்ளது.

கணிப்பு சந்தை தளமான Polymarket-இல், இந்த மாதத்திற்குள் நிரந்தர சமாதான ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(22.05.2026) கணிப்பு சந்தை14 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் தொடக்கத்திற்குள் ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பு 46 சதவீதமாகவும், ஜூலை இறுதிக்குள் அது 72 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒப்பந்தத்தின் வடிவமைப்பு இறுதி ஒப்புதலுக்காக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற தலைவர் முகம்மது பகர் கலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மதி ஆகியோர் கட்டார் தலைநகர் தோஹாவிற்கு சென்றடைந்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் கடல்சந்தி பாதுகாப்பு மற்றும் அதிக செறிவு கொண்ட யூரேனியம் தொடர்பான விவகாரங்கள் முக்கியமாக பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஒப்பந்தம் முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்கும் என்றும், அடுத்த 30 முதல் 60 நாட்களில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு நடுவர் பணியில் ஈடுபட்டுள்ளன.
சந்தை நிலவரத்தில், கச்சா எண்ணெய் விலை 5.4 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 91.30 டொலராக சரிந்தது.
தங்கம் 1.35 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,570 டொலராக உயர்ந்தது.
அமெரிக்க டொலர் மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில், இது அனைவருக்கும் நல்ல ஒப்பந்தமாக அமைய வேண்டும். இல்லையெனில் மீண்டும் பெரிய மோதல்கள் வெடிக்கக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.