ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்! சூட்சுமமாக காய்நகர்த்த தொடங்கிய அமெரிக்கா
ஹோர்முஸ் விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் முயற்சிக்கு, ஈரானின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரீபாபாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உண்மைகளைத் திசைதிருப்பும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு நாடு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் போது, அதன் விளைவாக ஏற்படும் சூழலை அதே நாட்டுக்கு எதிராகத் திருப்புவது சட்டவிரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் தற்காப்பு உரிமை
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளை மறைத்துவிட்டு, கடற்பயண சுதந்திரம் பற்றிப் பேசுவது சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கரீபாபாடி கூறியுள்ளார்.

Image Credit: ABC News
மேலும், ஈரானின் தற்காப்பு உரிமையையும், அதன் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளையும் புறக்கணிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஒருதலைப்பட்சமானது என்றும், அது தோல்வியிலேயே முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ராணுவ நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்டு வரும் கட்டுப்பாடுகளை நிறுத்தக் கோரி அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்தத் தீர்மானம் குறித்து, கடந்த வாரம் வளைகுடா நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி இருந்தது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஈரானுக்கு எதிராக மேலதிக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் அல்லது தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படும் என சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |