அமெரிக்காவின் பிடியில் வெனிசுலா எண்ணெய் வருவாய்: ட்ரம்பின் இலக்கை எட்டிய விற்பனை
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான புதிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தின் கீழ், வெனிசுலாவின் எண்ணெய் விற்பனை வருவாய் இந்த மாத இறுதிக்குள் 200 கோடி டொலரை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ போதைப்பொருள் கடத்தல் முறைப்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி முழுவதையும் அமெரிக்கா தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
விற்பனை வருவாய்
இந்த விற்பனை வருவாய் அனைத்தும் கத்தாரில் உள்ள அமெரிக்க மேற்பார்வையின் கீழ் இயங்கும் சிறப்பு நிதியத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.

முன்பு தடைகளால் மறைமுகமாக வாங்கி வந்த சீனா, தற்போது நேரடி சந்தையில் வெனிசுலா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் மட்டும் சுமார் 4 கோடி பீப்பாய் எண்ணெய், சராசரியாக ஒரு பீப்பாய் 50 டொலர் என்ற விலையில் விற்கப்பட்டுள்ளது.
உற்பத்திப் பகிர்வு
இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயித்த முதல்கட்ட இலக்கான 3 கோடி முதல் 5 கோடி பீப்பாய்கள் என்ற இலக்கை எட்டியுள்ளதாக அமைச்சர் கிறிஸ் ரைட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, மடூரோவின் ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட 19 எண்ணெய் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களை வெனிசுலா எண்ணெய் அமைச்சகம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கையால் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான எண்ணெய் அமெரிக்க வளைகுடா பகுதிகளுக்குச் சென்றாலும் இந்தியா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் சர்வதேச சந்தையில் வெனிசுலா கச்சா எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |