பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடிய உதய கம்மன்பில
கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள நூலில் ஒரு சில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச 'அதிபர் பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் எம்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிதி மோசடி
புத்தகத்தில் 66 ஆவது பக்கத்தில் 'உதய மற்றும் விமல் ஆகியோர் எம்மை விட்டு விலகிச் சென்றார்கள்' என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதன் பாரதூரத்தன்மையை அவர் மறந்து விட்டார்.

உண்மையில் நாங்கள் விலகிச் செல்லவில்லை, விலக்கப்பட்டோம் அத்தோடு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவர் மறந்து விட்டார்.
அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக எங்களை அரசாங்கத்திலிருந்து விலக்கவில்லை மேலும் பொருளாதார பாதிப்பால் சமூக கட்டமைப்பில் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைத்தோம்.
தனிப்பட்ட முரண்பாடு
எமது கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாததால் மக்களிடம் உண்மையை எடுத்துரைத்ததுடன் இதன் பின்னரே நாங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டோம்.
மேலும் 65 ஆவது பக்கத்தில் 'பசிலுக்கும் உதயகம்மன்பிலவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு காணப்பட்டது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பசிலுக்கும் எனக்கும் தனிப்பட்ட முரண்பாடு தோற்றம் பெற நான் அவரின் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கவுமில்லை மற்றும் மல்வானை சொகுசு வீட்டுக்கு உரிமை கோரவுமில்லை.
எனக்கு அவரிடம் அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் இருக்கவில்லை ஆகவே பசிலுக்கும் எனக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையை கோட்டாபய ராஜபக்ச வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |