அனர்த்தத்தால் மூடப்பட்ட சில பாடசாலைகளை திறப்பது குறித்து வெளியான அறிவிப்பு
ஊவா மாகாணத்தில் டித்வா புயலினால் கடுமையாக அனர்த்தத்திற்கு உள்ளான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச (Rohitha Amaradasa) தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட போதே ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டித்வா புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை இரண்டு கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
அதற்கமைய, கடுமையாக அனர்த்தத்திற்கு உள்ளான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை (16)ஆம் திகதியும், பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்திலுள்ள 291 பாடசாலைகளில், பிபிலை வலயத்திலுள்ள தெஹிகலவத்தை பாடசாலை தவிர்ந்த ஏனைய 290 பாடசாலைகளையும் நாளை (16) திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று, பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை வலயத்தில் திக்யாய வித்தியாலயம், களுக்கல வித்தியாலயம் மற்றும் பின்னகொல்ல வித்தியாலயம் தவிர்ந்த ஏனைய 78 பாடசாலைகளை நாளை திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலவும் அனர்த்த நிலைமையுடன் பதுளை மாவட்டத்தின் ஏனைய வலயங்களான பதுளை வலயம், பண்டாரவளை வலயம், வெலிமடை வலயம், பசறை வலயம் ஆகிய வலயங்களைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது.
அத்துடன், 29 ஆம் திகதி அந்த வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 1 மணி நேரம் முன்