திட்டமிட்டு பழிவாங்கும் செயல் - பிணையில் விடுவிக்கப்பட்ட வ.பார்த்தீபன் சீற்றம்
யாழ். (Jaffna) பருத்தித்துறை நகர் பகுதியில் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்தமை காவல்துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர் வ.பார்த்தீபன் (V. Partheepan) பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் நேற்று (24.10.2024) வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்த போது தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர் வ.பார்த்தீபன் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் ஒரு நபர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட விதி
தொடர்ந்து தெரிவிக்கையில், தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாகவே எமது ஆதரவாளர்கள் பருத்தித்துறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அதனை தடுத்து குழப்பும் வகையில் பருத்தித்துறை காவல்துறை நடந்துகொண்டுள்ளனர்.
பரப்புரை இடம்பெற்ற இடத்திற்கு தொலைவாக வாகனத்தில் இருந்த என்னை ஆதரவாளர்கள் மூலம் தொலைபேசியில் அழைத்து அவ்விடத்திற்கு திட்டமிட்டு வரவழைத்தே கைது செய்துள்ளனர்.
அத்துடன் பரப்புரை நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்காக தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த துண்டறிக்கைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திட்டமிட்டு பழிவாங்கும்
தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடமராட்சி மண்ணில் பரப்புரையில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் எங்களுக்கு எதிரான கட்சியினரது தூண்டுதலில் திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இத்துடன் ஓய்ந்து போகமாட்டோம். இதே வீரம் விளைந்த வடமராட்சி மண்ணில் நாளையும் (இன்றும்) தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக எமது பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுப்போம் என வ.பார்த்தீபன் மேலும் தெரிவித்தார்.
செய்திகள் பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |