பணிப்புறக்கணிப்பால் கொட்டும் மழையில் அவதியுறும் நோயாளர்கள்!
வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருப்பதன் காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருக்கின்றன. இன்று காலை 07 மணி முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வவுனிய பொது வைத்தியசாலையில் தாதியர்கள், மற்றும் ஏனைய சுகாதார பிரிவினர் கடமைக்கு சமூகமளிக்காமையினால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக இன்று அதிகாலை தொடக்கம் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் மழை பெய்துவரும் நிலையில் மழையினையும் பொருட்படுத்தாது தூர இடங்களில் இருந்தும் வைத்தியசாலைக்கு பல்வேறு மருத்துவ தேவைக்காக வந்த நோயாளிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 7 கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






