அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி
அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்திருந்தது.
வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி முன்பாக இன்று (16) பிரதான அஞ்சலி நிகழ்வு தீபம் ஏற்றி மலர் தூபி இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்தும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற குறித்த ஊர்திக்கு மக்கள் திரண்டு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
பிரதான நினைவேந்தல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஊர்திப் பவனியானது ஆரம்பமானது.

இந்தநிலையில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
மேலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதியின் நினைவைப் போற்றும் வகையில், நினைவு ஊர்திப் பயணம் இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமானது.
சிவன் கோவிலுக்கு முன்பாக இந்த நினைவு ஊர்தி தனது பயணத்தைத் தொடங்கியது. ஊர்தி புறப்படுவதற்கு முன்னதாக, அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அன்னை பூபதியின் தியாகத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல் மற்றும் தமிழின உரிமைப் போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூருதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


செய்தி - தொம்சன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |