நானே கொலை செய்துவிட்டு மரணச்சான்றிதழை வழங்குகின்றேன் என்பதுபோன்றுள்ளது கோட்டாபயவின் கருத்து - ஆதங்கத்தில் உறவுகள்!
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,
ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் உறுதிமொழியை நம்பி கையளிக்கப்பட்ட எமது குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி நிலை நாட்டப்படவில்லை.
ஆயினும் எமக்கான நீதியை வழங்காமல் மரணச்சான்றிதழையும் இழப்பீட்டையும் வழங்குவதாக ஜனாதபதி சொல்கிறார். அவரது கருத்தை நாங்கள் கண்டிக்கின்றோம். தானே கொலையை செய்துவிட்டேன் எனவே மரணச்சான்றிதழை வழங்குகின்றேன் என்றவாறாகவே அவரது கருத்து அமைந்துள்ளது.
எமது தமிழ் குழந்தைகள் ஆயுதம் ஏந்தியவர்களா? அல்லது பயங்கரவாதிகளா? சிறுவர்களின் பாதுகாப்பிற்காக எத்தனையோ அமைப்புக்கள் இருந்தும் எமது குழந்தைகளை பாதுகாக்க அனைவரும் தவறிவிட்டனர். எனவே சர்வதேச சிறுவர் தினம் எமக்கு துக்க தினம் எனத் தெரிவித்துள்ளனர்.

