வெடுக்குநாறிமலை விவகாரம்: கொழும்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறிலங்கா காவல்துறையினரது தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அராஜகங்கள் மற்றும் கைதுகள் துன்புறுத்தல்கள் அடிப்படை வசதிகளற்ற சிறையில் அடைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
தண்டனை
அதேவேளை, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரது பக்கச் சார்பானதும் நம்பகமற்றதுமான செயற்பாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இடையூறுகள் இன்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கோரி மகஜர் ஒன்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் வன்முறை
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று காவல்துறையினரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதையடுத்து, அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குறித்த எட்டுப்பேரையும் விடுதலை செய்து வவுனியா நீதிமன்று 20 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
