கனடாவில் காலமான புகழ்பெற்ற சிரேஷ்ட பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்!
இலங்கையின் இன மோதல்கள் மற்றும் முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக எழுதி வந்த புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளரும் பத்தியாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது 71ஆவது வயதில் கனடாவில் காலமானார்.
வீரகேசரி தமிழ் நாளிதழில் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தி ஐலண்ட் மற்றும் தி இந்து ஆகிய ஆங்கில நாளிதழ்களின் இலங்கை நிருபராகப் பணியாற்றி உள்நாட்டுப் போர்ச் செய்திகளை துல்லியமாகப் பதிவு செய்து வந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டமைக்காக 1987 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
காத்திரமான கட்டுரைகள்
அதன்பின்னர் கனடாவுக்குக் குடிபெயர்ந்த போதிலும், அரசியல் மற்றும் இனப் பாகுபாடுகளைக் கடந்த தனது பரந்த தகவல் தொடர்புகளின் மூலம் இலங்கை அரசியல், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் ஆயுதப் போராட்டம் குறித்து தொடர்ந்து காத்திரமான கட்டுரைகளை எழுதி வந்தார்.

அவரது கருத்துக்கள் விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், ஒரு செய்திக்கு பல தரப்பு மூலங்களைச் சரிபார்த்து அவர் வெளியிட்ட உண்மைத் தகவல்கள் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதில்லை.
சமீபகாலமாக டெய்லி மிரர், டெய்லி எஃப்.டி ஆகிய நாளிதழ்களில் அரசியல் பத்திகளை எழுதி வந்த அவர், இந்தியத் தமிழ் சினிமா மற்றும் கலைத்துறை குறித்தும் எழுதி வந்தார்.
இவரது இறுதிப் பத்திக் கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) தி மார்னிங் நாளிதழில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |