11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி!
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (To Lam), இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.
குறித்த அறிக்கையில், வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை எனத் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதி
இலங்கை நாடாளுமன்றத்தில் கடைசியாக உரையாற்றிய வெளிநாட்டுத் தலைவர் 2015ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் அனைத்து கௌரவங்களும் விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற விசேட நிகழ்வில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி தோ லாமை உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
முக்கிய பிரமுகர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இரவு (07-05-2026) இலங்கையை வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அரச வரவேற்பு விழா இன்று (08-05-2026) காலை நடைபெற்றது.

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான தோ லாம், 209 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவுடன் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்தநிலையில் இன்று (08-05-2026) காலை சுமார் 11.05 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதி, சபையில் உரையாற்றினார்.
தனிப்பட்ட உறுப்பினர்கள்
இதையடுத்து, மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஏழு தனிப்பட்ட உறுப்பினர்களின் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க இந்த அரச விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் சீராக முன்னேறி வரும் வேளையில் இந்த விஜயம் விசேட முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் வியட்நாமை மாற்றியுள்ள அந்நாட்டின் வலுவான அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் வியட்நாம் ஜனாதிபதியின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |