யாழில் வீடு புகுந்து வன்முறைக்குழு அட்டகாசம் : வாகனங்களுக்கும் தீ வைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்முறைக்குழு ஒன்று வீடு புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வீட்டுக்குள் இன்று (13.10.2025) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழு புகுந்து இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த குழு, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி, மாசியப்பிட்டி சந்தியில் வீதியின் நடுவில் நிறுத்தி தீ வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
