ஓய்வை அறிவித்தார் விராட் கோலி - அதிர்ச்சியில் இரசிகர்கள்
புதிய இணைப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது மற்றும் பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இதனால் இந்திய அணியின் அணி தலைவராக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், ரோகித் சர்மா திடீரென தனது ஓய்வை அறிவித்ததுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இந்திய வீரர் விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து கோலியின் அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முடிவை மறுபரிசீலனை
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கோப்பையை இந்தியா அணி வெல்வதற்கு, விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணிக்காக, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, 30 சதம், 31அரை சதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஓய்வு பெற உள்ளதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாகவும், கோலியின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் விராட் கோலி இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
