சதித்திட்டங்களுக்குள் மக்களை சிக்க வைக்க முயற்சி
இலங்கையில் போராட்டங்களை முன்னெடுத்து நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு சில தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களுக்குள் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.
நாட்டை முன்னேற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தடைப்படும் பட்சத்தில் அதன் கடுமையான விளைவுகளை மக்கள் எதிர்நோக்க நேரிடும் என இன்று புத்தளத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நெருக்கடி நிலை
இலங்கையின் நெருக்கடி நிலையையும் மக்களின் கஷ்டத்தையும் உணர்ந்து தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் பதவியேற்ற அதிபர் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை 2015 இல் இருந்த நிலைமைக்கு கொண்டுவரவே முயற்சித்து வருகிறார். இதனை தடை செய்யும் விதத்தில் மக்கள் செயல்பட கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அடிப்படை பிரச்சினை
ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்று சில மாதங்களிலேயே மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்திருந்தார். எரிபொருள் சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போது அதிகரித்திருக்கும் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் இதன் சாதகமான மாற்றங்களை மக்கள் அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.