சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியை கருப்புப் பட்டியலில் இணைத்தது அமெரிக்கா!
இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த 2008, 2009 காலப்பகுதியில், கொழும்பில் பாடசாலை மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் முக்கியமானவராக பேசப்பட்டு வசந்த கரன்னகொடவை, அமெரிக்கா கருப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 இராஜாங்கத் திணைக்களம், வெளிநாட்டுச் செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031(உ) இன்படி, இவர் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை
வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடவடிக்கையின் விளைவாக, வசந்த கரன்னகொட மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரன்னகொட ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளிங்கன் அறிவித்துள்ளார்.
மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சுயாதீன விசாரணைகளாலும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு பாரிய மனித உரிமை மீறல்களை வசந்த கரன்னகொட மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகமானதும் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்
எனவே வசந்த கரன்னகொடவை கறுப்புப்பட்டியலில் இணைப்பதன் மூலம், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், மனித உரிமைகளை மீறுபவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் துன்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவு, 75 வருட காலம் பகிரப்பட்ட வரலாறாகும். அத்துடன் மதிப்புகள் மற்றும் சுதந்திரமான திறந்த இந்தோ-பசுபிக்குக்கான அர்ப்பணிப்பின் அடிப்படையிலானதாகும்.
75 வருட வரலாறு
இருதரப்பு உறவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்யவும் இது உதவும் என்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
