யாழ் மாநகர சபையை இழந்து விட்டோம் : சட்டத்தரணி வி.மணிவண்ணன் பகிரங்கம்
நாங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையை (Jaffna Municipal Council) இழந்துவிட்டோம் என்பது தான் வெளிப்படையான உண்மை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ் மாநகர சபை என்னை இழந்துவிட்டதா? இல்லையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”மாநகர சபையை இழந்ததில் எங்களுடைய கவனயீனங்களுக்கு அப்பால் நிறைய சதி நடந்திருக்கின்றது என்பதே எமது கருத்து.
தேர்தல் சட்டங்கள் தொடர்பில் இந்த தேர்தலில் மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட காரணத்திற்கமைய நாங்கள் உச்ச நீதிமன்றத்திலே தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆனால் வேறு சில கட்சிகள் இதே காரணத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது வேட்புமனுக்களை நிராகரித்தமை பிழை என தீர்ப்பு வழங்கியது.
ஒரு விடயப்பொருள் ஒவ்வொரு நீதிமன்றம் ஒவ்வொரு தீர்ப்பு வழங்கியதுடன், தேர்தல் ஆணையகம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நிலைப்பாடாக தேர்தலை மாற்றியமைத்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபையை சிங்கள தேசியக் கட்சி ஒன்று கைப்பற்றுகின்ற முனைப்பிலே இருந்தது. யாழ் மாநகரைக் கைப்பற்றுவது என்பது வடக்கு கிழக்கு தமிழர்களின் தலைநகரை கைப்பற்றுவதற்கு சமமானது.
அதற்கு அதிகம் சவாலான அணியாக எற்களுடைய கட்சியே இருந்தது. இந்த நிலையில் எங்களுடைய தரப்பு சதியாலோ விதியாலோ அகற்றப்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை” என தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தல், கட்சிகள் கூட்டுச்சேர்ந்தமை குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
