நாங்களே எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் - சபையில் சித்தார்த்தன் வலியுறுத்தல்
தமிழ் மக்கள் தங்களின் பிரச்சினைகளை தாங்களே தீர்க்கக்கூடிய அளவிலான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார்.
அரச தலைவரின் கொள்கை பிரகடன உரை தமிழ்தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என தெரிவித்துள்ளாதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை மீதான உரை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
எமது கொள்கைகள் என்பது எமது மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பது தான். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு என்பதை தெளிவாக கூறிவந்திருக்கின்றார்கள்.
அதனை ஓரங்கட்டிவிட்டு அபிவிருத்தி செய்வதில் எந்த பயனுமில்லை. தற்போது இந்த நாட்டில் பொருளாதார பின்னடைவுக்கு கொரோனா காரணமாக உள்ளது. இதனை நாங்கள் மறுக்கமுடியாது.
அதனை விட முக்கியமானது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இழப்புக்களும். எமது பிரச்சினைக்குத் தீர்வை எட்டாது. நாடு நிலைபேறான அபிவிருத்தியை அடைய முடியாது. எனவே நியாயமான தீர்வை காணுவதுதான் முக்கியமானதாக கொள்ள வேண்டாம்.
அரச தலைவரின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உண்மை ஆனால் சமாதானம் மலரவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கான காரணிகள் அதே நிலையில் தான் உள்ளது.
அந்த காரணிகளுக்கு சரியான தீர்வு கொண்டு வராமல் சமாதனம் மலர்ந்ததாக கூறமுடியாது. யுத்தம் மிகப்பெரிய அழிவை எமது பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பாரிய அபிவிருத்திகளை எமது பகுதிகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனை கொழுப்பில் இருந்து திட்டமிடுவதனூடாக அபிவிருத்தி எமது மக்களுக்கு பயனைப் பெற்றுக் கொடுக்க முடியாது.
முக்கியமாக அந்த மக்களின் பங்களிப்புடனும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளுடனும் அங்கிருக்கின்ற நிலைமைகளை புரிந்து செயற்பட வேண்டும். ஆகவே தான் எங்களுடைய பகுதிகளில் எமது மக்கள் தங்களின் அலுவல்களை தாங்களே பார்க்ககூடிய அளவிலான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வுதான் இன்று இருக்ககூடிய ஒன்று.
இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆம் திருத்தச்சட்டம் உள்ளது. அது இலங்கை - இந்திய உடன்படிக்கை ஊடாக ஏற்படுத்தப்பட்டது. இந்த நாட்டிலுள்ள அரசியல் அமைப்பில் உள்ள விடயத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமலும் - நடைமுறைப்படுத்த தயங்கும் ஒரு நாடு இலங்கையாகத் தான் இருக்கும்.
13ஆம் திருத்தத்தில் எமது பிரச்சினைகளுக்கான தீர்வு இல்லாவிட்டாலும் நாங்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வதற்கான நியாயம் இதில் இருக்கின்ற. காரணம் பல விடயங்களை மத்திய அரசு மீளப்பெற்று வருகின்றது.
வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாகவும் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகவும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்கின்றது. அத்துடன் 13ஆம் திருத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசில் உள்ள பல சிங்களத் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது. இதனால் தான் நாங்கள் 13ஆம் திருத்தத்தின் பங்காளியான இந்தியாவை கேட்கின்றோம்.
ஒப்பந்தத்தை தயாரிக்கும் போது கூட இது எமக்கான தீர்வாக அமையாது என வலியுறுத்தியிருந்தோம். 13ஆம் திருத்தம் முழுமையாக இல்லாது செய்யப்பட்டால் நாங்கள் மீண்டும் பூச்சிய நிலைக்குச் தள்ளப்பட்டு விடுவோம்.
முழுமையான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வுவரும் வரைக்கும் 13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியாவை கேட்பதற்கு காரணம் நாட்டை ஆட்சி செய்த - ஆட்சி செய்கின்ற அரசாங்கம் தான்.
இந்த அரசாங்கத்தை பொறுத்த வரைக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாக உழைத்து வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் 85 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
இதன் ஊடாக நோய் தொற்றை கட்டுப்படுத்துவதுடன் மரணங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள். அதே போல புதிய அரசியல் அமைப்பையும் கொண்டு வருவதனூடாக எமக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முயற்சிக்க வேண்டும்.
அவரது உரையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான எவ்விதமான வெளிப்பாடுகளும் காணப்படவில்லை. ஆகவே சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதனூடாகத் தான் நாட்டில் நிரந்தர அமைதியையும் நிலைபேறான அபிவிருத்தியையும் எற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.