அழிவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை தடுத்து நிறுத்துங்கள்! அனுரகுமார திஸாநாயக்க
அழிவை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட சேதனப் பசளையைச் சீனா பலவந்தமாக இலங்கைக்கு வழங்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anurakumara Dissanayake) குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளைத் தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை ஏற்றிய கப்பலை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் எனத் துறைமுக அதிகார சபையின் துறைமுக பொறுப்பதிகாரிக்கு கமத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் எடுத்துள்ள இந்த தீர்மானத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கக்கூடாது.
கமத்தொழிலுக்கு உழவர்களின் வாழ்க்கைக்கும் ஆட்சியாளர்கள் செய்து வரும் அழிவான வேலைத்திட்டங்கள் போதுமானது.
அழிவை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர்கள் இலங்கைக்குள் வருவதன் ஊடாக நாட்டின் முழு தாவர கட்டமைப்பும் குறிப்பிடத்துக்களவுக்கு வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கை தாவரங்களைத் தனிமைப்படுத்தும் சேவையினர் நடத்திய பரிசோதனைக்குப் பதிலாக மூன்றாவது தரப்பின் பரிசோதனையை நடத்த இணங்குமாறு குறித்த சீன நிறுவனம் யோசனை முன்வைத்துள்ளது.
அத்துடன் சீன நிறுவனத்திற்காக கடனுறுதிக் கடிதத்தை வழங்குவதற்குத் தடைவிதித்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றையும் பிறப்பித்தது.
