மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் - அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போதைய நிலையில் மக்கள் தொடர்பான நலனில் அக்கறை காட்டாமல் தவறுகளை திருத்த முடியாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் அரசாங்கம் விரட்டியடிக்கப்படும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera). இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது விலைகள் அதிகரித்துள்ளன. உரத்தடையால் விவசாயிகள், எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள், சம்பள முரண்பாட்டால் ஆசிரியர்கள் என அவைனவரும் கொந்தளித்து போயுள்ளனர். இந்த நிலையில் இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வைக்காணாது வியாபாரிகளின் தீர்மானங்களுக்கு ஏற்ப நாட்டை முன்னெடுக்க அரசாங்கம் இடமளிக்க முடியாது.
நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களை கடுமையாக பாதித்துள்ளமை உண்மையே, எந்த காரணம் கூறியும் இதனை அரசாங்கமாக எம்மால் நிராகரிக்க முடியாது. ஆனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி நிலைமையை நாடு எதிர்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இலங்கை எதிர்பார்த்திருந்த வருவாய்கள் அனைத்துமே முடக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மூலமாக வருடாந்தம் கிடைக்கும் ஆறு பில்லியன் ரூபா வருமானம் முழுமையாக இல்லாது போயுள்ளது. இரண்டு ஆண்டுகளில் 12 பில்லியன் ரூபா இல்லாது போயுள்ளது. ஏற்றுமதி மூலமாக கிடைக்கும் நான்கு தொடக்கம் ஐந்து பில்லியன் ரூபா வருமானம் இல்லாது போயுள்ளது.
மேலும் பல வழிகளில் எமக்கு கிடைக்கவிருந்த முதலீடுகள் இல்லாது போயுள்ளது. எனவே இதுவே அரசாங்கத்திற்கு பெரிய நெருக்கடி நிலைமைகளை உருவாக்கியுள்ளது.
ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு சில வியாபாரிகள் செயற்படும் விதம் மிகவும் மோசமானதாகும் என்பதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களான எமது கருத்தாகும். வியாபாரிகளின், இறக்குமதியாளர்களின் நோக்கங்களுக்காக தேவைக்கேற்ப விலை அதிகரிப்பை அனுமதிக்க முடியாது.
அரசாங்கம் இந்த விடயங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியாது. அரசாங்கம் தலையிட்டு தீர்மானம் எடுக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த காரணிகளை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கமாக நாம் விட்டுள்ள தவறுகள் என்ன என்பதை ஆராய்ந்து, சுய கணிப்பை செய்துகொண்டு உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டிய விடயங்களை கவனம் செலுத்தி மக்கள் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் அடுத்த மூன்று ஆண்டுகளில் எமது அரசாங்கத்தை மக்களே விரட்டியடித்துவிடுவார்கள். கடந்த நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கை சுக்குநூறாக சிதறும் விதத்தில் அப்போதைய ஆட்சியாளர்கள் செயற்பட்டதன் காரணமாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இப்போது தன்னிச்சையாக எடுக்கும் தீர்மானம், தவறான முடிவுகள், நாட்டிற்கு அவசியம் இல்லாத உடன்படிக்கைகள், மக்களின் நலன்களில் கவனம் செலுத்தாது எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக எமக்கும் அந்த நிலைமை ஏற்படலாம் என்பதை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும் எனதெரிவித்துள்ளார்.