யாழ். இராணுவ படைத் தலைமையகம் அகற்றப்படாது : அரச தரப்பு அறிவிப்பு
யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் வடக்கு - கிழக்கில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுவதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekara) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தல் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |