அதிகரிக்கும் மழை வீழ்ச்சி - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பகுதிக்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது, நாளை மறுதினம் மேலும் வலுவடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், நாடு முழுவதும் நாளை (30) முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
நாளை மறுதினம் (31) தொடக்கம், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையில் கடும் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என அந்தத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
இதேவேளை, குறித்த நாட்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் நாட்டின் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனக் கூறப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் உள்ள கடல்தொழிலாளர்கள் எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

