காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையை அண்டிய வளிமண்டலத்தில் காணப்படும் கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாகவே பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும் என்று எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காலியிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, காலியிலிருந்து கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இந்நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயல்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.