மீண்டும் அஸ்வின் மாயா ஜாலம் - சுருண்டது மேற்கிந்தியத்தீவுகள்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சுழல் மாயா ஜாலத்தால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
டொமினிக்கனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று தனது முதல் இனிங்ஸை ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.இதனால் அவ்வணி 64.3 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜெய்வால்

பதிலுக்கு தனது முதலாவது இனிங்ஸை தொடங்கிய இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.அத்துடன் இந்திய அணி 271 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா 103,அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜெய்வால் 171,கோலி 76 ஓட்டங்களை எடுத்தனர்.
அஸ்வின் சுழலில் சிக்கி

பதிலுக்கு தனது இரண்டாவது இனிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வின் சுழலில் சிக்கி திணறியது. இதனால் மேற்கிந்திய வீரர்கள் களத்திற்கு வருவதும்,போவதுமாக நடையை கட்டிக்கொண்டு இருந்தனர்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிரெய்க் பிராத்வைட் (7), சந்தர்போல்(7) ரேமன் ரைபர் (11), பிளாக்வுட் (5), ஜோசுவா டா சில்வா(13) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அபாரவெற்றி

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50.3 ஓவர்களை எதிர்கொண்டு130 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை அள்ளினார்.முதல் இனிங்ஸிலும் அவர் 05 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக அறிமுக போட்டியில் களமிறங்கி 171 ஓட்டங்களை விளாசிய ஜெய்வால் தெரிவானார்.