வானிலிருந்து பறந்து வந்த மர்ம பொருள் என்ன ? கிடைத்தது விடை
நாட்டின் சில பகுதிகளில் வானிலிருந்து வந்த மர்ம பொருள் என்ன என்பதற்கு விடை கிடைத்துள்ளது.
இதன்படி வானிலிருந்து வந்தது சிலந்தி வலையை ஒத்ததான வலையெனவும் இது இயற்கையானது எனவும் கொழும்பு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மொனராகலை, அம்பாறை, தெஹிஅத்தகண்டிய, சூரியவெவ உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று (02) இந்த வலை வடிவிலான ஒன்று பறந்து வருவதை மக்கள் அவதானித்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்விலேயே, இந்த வலையானது, சிலந்தி வலை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிலந்திகள் இந்த காலப் பகுதியிலேயே முட்டை இடும் எனவும், முட்டையிலிருந்து உருவாகும் சிலந்திகள் அங்கும் இங்கும் செல்ல சிலந்தி வலையை பயன்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான சிலந்தி வலைகளே, இவ்வாறு காற்றில் பறந்து, பல பகுதிகளுக்கும் செல்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.