இந்தியாவில் தயாரான நான்கு இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்தியாவில் தயாரான மருந்துகள்
இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 சிறுவர்கள் இருமல் மருந்தை குடித்த நிலையில் உயிரிழந்ததை அடுத்து , இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார மையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த நான்கு மருந்துகளை உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த மருந்துகளை தயாரித்திருப்பதாகவும், அவை கள்ள சந்தைகள் மூலமாக ஆபிரிக்க நாடுகளில் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த நிறுவனம் தயாரித்த Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup நான்கு மருந்துகளையும் உபயோகிக்க வேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
சிறுவர்களிடையே சிறுநீரக நோய் அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் இருந்து குழந்தைகளிடையே சிறுநீரக உபாதைகள் அதிகரித்திருப்பதை காம்பியா அதிகாரிகள் உறுதி செய்ததை தொடர்ந்து உலக சுகாதர மையம் இதுகுறித்த விசாரணையில் இறங்கியது.
மருந்துகளை ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்ததில் அதில் டைஎத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த மருந்துகளை உபயோகித்தால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மரணத்திற்கு வழிவகுக்கும் கடுமையான சிறுநீரக காயம் ஆகியவை ஏற்படலாம் எனவும் உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.
பிற தயாரிப்புகளில் ஆபத்தான பொருட்கள்
சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம், காம்பியாவிற்கு மட்டும் இத்தகைய மருந்துகளை அனுப்பியிருக்கலாம் என இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சுட்டிக்காட்டியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இருப்பினும், அந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளில் இத்தகைய ஆபத்தான பொருட்கள் இருக்கலாம் எனவும் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
