தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நாடுவது ஏன்?
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்காமையின் காரணமாகவே, தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நாடி தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்
, “இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்ற போது சர்வதேச தலையீடுகள் காணப்பட்டமை இரகசியமல்ல. அரச தலைவர்களே அவ்வாறான தலையீடுகளுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
சர்வதேச தரப்பினர் ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டு எவ்வாறு பயனைப் பெற்றுக் கொள்வது என்பதே இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாகக் காணப்படுகிறது.
தேசிய சொத்துக்களை விற்றாவது சர்வதேசத்தை திருப்திப்படுத்தி தற்காலிக தீர்வினைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையாகவுள்ளது.
அரசாங்கத்தினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாத போதிலும் , தமிழ் அரசியல் கட்சிகள் அரச தலைவருடன் சந்திப்பொன்றுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், நீண்ட காலமாக அதற்கான வாய்பளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அவர்கள் மாற்று வழியில் தீர்வுகளைக் காண வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.
