அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியேன்! விஜயதாச ராஜபக்ச பதில்
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்ச மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளதாக தெரித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உரிமை கட்சிக்கு உண்டு என்ற போதிலும் நாட்டில் உள்ள சட்டத்தின் ஊடாக அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்வின் இல்லத்தில் மகா சங்கத்தினரின் பங்குபற்றலுடன் விசேட பௌத்த மத வழிபாடுகள் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது மகாசங்கத்தினரிடம் ஆசிபெற்றுக்கொண்ட விஜயதாஸ ராஜபக்ஸ, தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளியிடப்பட்ட கருத்துக் குறித்து பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
கொழும்பு துறைமுக நகரை சீனாவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைவிட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்து விடயங்கள் ஊடாகவும் இந்த நாட்டில் தனியான சீன கொலணி ஒன்று உருவாகின்றது என்பதை முழு உலகும் ஏற்றுக்கொண்டுள்ளது.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் இடமொன்றே உருவாக்கப்படுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது என்னுடைய அமைச்சுப் பதவி தொடர்பிலான பிரச்சினையல்ல. அவ்வாறான மனநலப் பிரச்சினையும் எனக்கு இல்லை. நாம் அரசியலில் வாழ்பவனும் அல்ல, 35 வருடங்களுக்கு முன்னர் கஷ்டப்பட்டு உழைத்து, நாட்டிற்கு வரி செலுத்தும் பிரஜையே நான். எங்களுடைய வரியிலேயே அரசியல்வாதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.
எனக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு கட்சிக்கு முழு உரிமை உண்டு. நாட்டில் சட்டம் உள்ளது. அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும்.
கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்த அடிப்படையில் பிற தரப்பினருக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய சட்டமூலத்தை இரசகியமான முறையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சித்தது.
அதற்காகவே கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு என்மீது பல குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை.
நாட்டின் தேசிய வளங்களை ஏனைய நாட்டவர்களுக்கு வழங்க நாட்டு மக்கள் இடமளிக்க வேண்டாம். தேசிய வளங்கள் அந்நிய நாட்டவர் வசமானால் இலங்கை மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்றார்.