இளைஞர் மீது சரமாரி தாக்குதல்..! வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கொடூரம் - ஒருவர் கைது
தாக்குதல்
சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைய நாட்களாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்துவந்துள்ளனர்.
அந்தவகையில் நேற்று(03) மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில் மாங்குளம் நகருக்கு அண்மையில் வீதியில் சென்ற இளைஞரை மறித்த சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்ப்பட்டுள்ளனர்.
கைகலப்பாக மாறிய வாக்குவாதம்

இதன்போது நீங்கள் யார் என்று வினவி அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய போது அடையாள அட்டை காண்பிக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கின்றார்
இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த இளைஞரின் அண்ணா அதிகாரிகளிடம் அடையாள அட்டை காண்பிக்குமாறு முரண்பட்ட வேளை சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
இதன்போது சிவில் உடையில் வீதியால் செல்பவர்களை மறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது என்ற வாக்குவாதம் இடம்பெற்று அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தன்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இளைஞரின் சகோதரன் கைது

இதன்போது சம்பவ இடத்திற்கு மாங்குளம் காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் காயமடைந்த இளைஞரின் சகோதரனை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து இளைஞனை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் முறைப்பாட்டின் பின்னர் இரண்டு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கான பத்திரங்களை பெற்று வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் இந்த இந்த செயற்ப்பாடு மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ( இரானுப்பிரிவை சேர்ந்தவர்) சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ள போது எவ்வாறு மக்களை சோதனையிட முடியும் மற்றும் சீருடை அணியாது சிவில் உடையில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட முடியுமா எனவும் இவ்வாறு சிவில் உடையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செயற்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள அதேவேளை வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது அவர்களுடைய சீருடையில் வருகைதர வேண்டும் இவ்வாறு சிவில் உடையில் வந்து வீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் இளைஞர்களுடன் முரண்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை செய்ய கூடாது எனவும் இவ்வாறு பொறுப்பற்ற தனமாக கடமையாற்றும் அதிகாரிகள் மீது திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
உரிய அடையாளப்படுத்தலுடன் கடமை

இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னர் மாங்குளம் கற்குவாறி பகுதியில் சிவில் உடையில் குறிப்பாக ஒருவர் (ஜம்பர்)கட்டைகாற்சட்டையுடனும் ஏனையவர்கள் சிவில் உடையில் ஒருவர் கூட திணைக்கள சீருடை அணியாத நிலையில் கணவன் வீட்டில் இல்லாத நிலையில் மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்த வீட்டில் சென்று வீடுமுழுவதும் சோதனை செய்துள்ளனர் இந்த செயற்பாடும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் பொதுமக்கள் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகளிடம் தங்களது பணியாளர்களை உரிய அடையாளப்படுத்தலுடன் கடமைகளில் ஈடுபட பணிக்குமாறும் பல்வேறு இடங்களில் திருடர்களும் பொய்களை கூறி வீடுகளுக்குள் சென்று திருடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளது எனவும் இவ்வாறு அச்சு சூழலில் மக்கள் உள்ளபோது உங்கள் அதிகாரிகள் இவ்வாறு உரிய அடையாளப்படுத்தல் இல்லாமல் செயற்ப்படுவதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்