அடக்குமுறைகள் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்! எதிர்க்கட்சி எச்சரிக்கை
பொருளாதார நெருக்கடியால் வறுமையிலுள்ள பெருந்தோட்ட மக்களின் மனித உரிமைகள் தோட்ட நிர்வாகங்களால் மீறப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களை அச்சுறுத்தி வெள்ளையர்களின் ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்ற நிர்வாகத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் ஈடுபட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்ட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைதெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதே நிலைமை தொடருமாயின் பாரியதொரு தொழிற்சங்க போராட்டத்திற்கு முகங்கொடுக்க கம்பனிகளும் அரசாங்கமும் தயாராக வேண்டும். பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு தொழில்சுமை அதிகரிக்கப்பட்டு அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தினரால் பயமுறுத்தி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது மனித உரிமை மீறலாகும். இதே நிலைமை தொடருமாயின் பாரிய தொழிற்சங்க போராட்டம் வெடிக்கும்.
வறுமை , தடுப்பூ பிரச்சினை மற்றும் கல்வி என விடயங்களில் அந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் மேலும் நெருக்கடியை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
வெள்ளையர்களின் ஆட்சியில் தொழிலாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதைப் போன்று தற்போது கம்பனிகள் செயற்படுகின்றன.
இதே நிலைமை தொடருமாயின் கம்பனிகளும் அரசாங்கமும் பாரியதொரு தொழிற்சங்க போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.