ஆயுர்வேத கறுவா சிகரட் சட்டத்துக்கு முரணானது! அனுமதி பெறப்படவில்லை - வெளியிடப்பட்ட எதிர்ப்பு
அமைச்சர் விமல் வீரவன்சவினால் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுர்வேத சிகரெட் என கூறப்படும் சிகரெட்டானது, ஆயுர்வேத சூத்திர குழுவிடமிருந்து எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை என அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டுக்குழு செயலாளர் வைத்தியர் எம்.எஸ்.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், அமைச்சர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சின் ஊடாக, ஒருவகையான சிகரெட் ஒன்றை ஆயுர்வதேம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாம் மிகவும் தெளிவாக அமைச்சருக்கும் மக்களுக்கும் கூறிக்கொள்வது, ஆயுர்வேதத்தின் பெயரைப் பயன்படுத்தி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதேயாகும். ஆயுர்வேத புகைப்பழக்கம் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இந்த சிகிச்சை முறைகளை கையாளும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
அவற்றை கையாள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இந்த மருந்தக சிசிச்சை முறைகளை பயன்படுத்தும் நோயாளர்கள் உள்ளனர். அவ்வாறிருக்க, இதனை சாதாரண இனிப்புப் பாணியைப் போன்று விநியோகிக்க முடியாது.
இது குறித்து அச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் ஜீ. ரணசிங்க, ஆயுர்வேத சூத்திர குழுவின் எந்தவொரு அனுமதியையும் பெறாது சந்தைப்படுத்துவது ஆயுர்வேத சட்டத்துக்கு முரணானது. ஆகவே, இது சட்ட விரோத செயலாகும். அமைச்சரின் செயலாளர்கள் ஆயுர்வேத சூத்திர குழுவுக்கு வந்து இவற்றை அங்கீகரிகக்கோரி எமக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்களோ என நாம் அவதானத்துடன் இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.