அமோக ஆதரவுடன் அடுத்த அரச தலைவராவேன்!! சஜித் பகிரங்கம்
அடுத்த அரச தலைவர் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை தனக்கு நூறு வீதம் உண்டென எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்தார்.
அடுத்த அரச தலைவர் தேர்தலை இலக்குவைத்து கட்சிக்குள் இருக்கும் சம்பிக்க ரணவக்க, அரசியல் இயக்கத்தை உருவாக்கி வருவதாக பேசப்படும் நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
"சம்பிக்க ரணவக்கவின் உண்மையான திட்டம் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் தான் எதிரணியின் அடுத்த அரச தலைவர் வேட்பாளர்.
கடந்த தடவை அரச தலைவர் தேர்தலின்போது எதிரணிகளுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் எனக்கான வாக்குகள் சிதறின. இதனால் கோட்டாபய ராஜபக்ச வெற்றிவாகை சூடினார்.
அடுத்த தடவை கோட்டாபய ராஜபக்சவோ அல்லது வேறெந்த ராஜபக்சவோ அரச தலைவர் தேர்தலில் களமிறங்கினால் வீழ்த்தியே தீருவேன்.
நாட்டு மக்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கமே உள்ளனர். அவர்கள் நாட்டுக்கான புதிய தலைவரைத் தேடுகின்றனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க நான் அடுத்த தடவையும் அரச தலைவர் வேட்பாளராகப் போட்டியிடுவேன்” என்றார்.
