பேருந்து நிலைய கழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது
கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (01.09.2026) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த விசாரணைகளில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கழிப்பறை நீர் தொட்டி
மேலும் நேற்று முன் தினம் பிரசவித்ததாகக் கருதப்படும் சிசுவைக் கழிப்பறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அதனை அவதானித்த பொதுமக்கள் அப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணும், சிசுவும் உடனடியாகக் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிசு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |