மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்ட பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக விசாரணை
அதற்கமைய சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி ம.கோணேஸ்வரனின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி க. ஜெயரூபன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சம்பவ இடத்தில் இருந்த சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இனங்காணப்பட்ட சந்தேக நபரான பெண் நேற்றைய தினம்(06) மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நான்காவது பங்குனி திங்கள் உற்சவத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி ஆலயம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நகை
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் பிற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி மீட்கப்பட்டதோடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட 'மகிழ் ஊந்து' கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபரான 58 வயதான பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |