ஆடைத் தொழிற்சாலைக்குள் இடம்பெற்ற திருட்டு- சி.சி.ரீவி ஆதாரத்துடன் சிக்கிய பெண்!
அநுராதபுரத்தில் ஏ.ரி.ம் அட்டையைத் திருடி பணம் பெற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் தம்புத்தேகமவில் இளம் பெண் ஒருவர் தனது நண்பயின் ஏ.ரி.எம். அட்டையை திருடி தானியக்க இயந்திரத்தில் பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தம்புத்தேகமவில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்காகச் சென்ற இளம் பெண்கள் இருவர் மிகவும் குறுகிய காலத்திற்குள் தமது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறும் வகையில் நெருக்கமான நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நண்பி உணவு எடுப்பதற்காக வெளியே சென்ற போது நண்பியின் கைப் பையைத் திறந்து அவருடைய ஏ.ரி.எம். அட்டையை எடுத்து அவசர அவசரமாக அங்கிருந்து வெளியே சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஏ.டி.எம் அட்டையை திருடிச் சென்ற நண்பி வங்கி தானியக்கி இயந்திரத்திற்குச் சென்று ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி 36000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதுடன் தம்புத்தேகமவில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குச் சென்று இரண்டு தங்க மோதிரங்களை கொள்வனவு செய்வதற்காக முற்பணத்தை வழங்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தனது கைப் பை காணாமல் போயுள்ளமை பற்றி கைப் பையின் உரிமையளரான குறித்த பெண் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை அந்த ஆடைத் தொழிற்சாலையின் சீ.சீ.ரி.வி காணொளிகளை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது கைப்பையின் உரிமையாளருடன் மிகவும் நெருக்கமான நண்பராக பழகிவந்த இளம் பெண்ணே குறித்த ஏ.ரி.எம். அட்டையை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.