யாழில் பரபரப்பு சம்பவம்: வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்
யாழ்ப்பாணத்தில் (jaffna) எரியூட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (20.6.2024) இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய பவானி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த பெண் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில், மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |