தென்கொரியாவில் வேலை வாய்ப்பு - காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!
இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தென்கொரியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் பிரபல நிறுவனமான ´ஹூண்டாய்´நிறுவனத்தின் (Hyundai) உயர்மட்ட பிரதிநிதி, நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய வேலைகளுக்கான இலங்கை இளைஞர்களைத் தெரிவு செய்வது தொடர்பான நேர்முகத் தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கிம் பியோங் போ (Kim Byong Boo) உள்ளிட்ட குழுவினர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை நேற்று (04) நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.
அதிக சம்பளம்
இந்நாட்டு இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் எனவும் மேலும் பயிற்சி பெற்ற இலங்கை இளைஞர்களை நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் நல்ல பண்புகளுடன் ஒழுக்கமான இளைஞர்களாக இருப்பது விசேட அம்சம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் முறையான தொழிற்பயிற்சிகளை வழங்குவதுடன், பயிற்சி பெற்ற ஊழியர்களை தாமதமின்றி தென்கொரியாவிற்கு விரைவில் அனுப்ப வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர்கள், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகபட்ச அளவில வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதனால், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, மின்னியல் வல்லுநர், வெல்டிங் போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருப்பதாகவும், அவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.
