உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்றிணைவு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வை மையப்படுத்தி உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்று கூடிவருகின்றனர்.
உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்; என்ற கருப்பொருள் இந்த முறை பொதுச்சபை அமர்வின் தலைப்பாக உள்ளது.
140 க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள்
ஐ.நா பொதுச்சபையின் 78ஆவது அமர்வில் உரையாற்றுவதற்காக உலகளாவிய ரீதியில் 140 க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் மற்றும் அரச தலைமைகள் நியூயோர்க்கில் களமிறங்கியுள்ளனர்.
இந்த முறை அமர்வில் உலகின் பருவநிலை நெருக்கடி மற்றும் உக்ரைனிய போர் ஆகிய விடயங்கள் முக்கிய இடத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆரம்பமாகும் உயர்மட்ட விவாதத்தில் பேசப்படும் விடயங்கள் மிகவும் பரவலாக எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும் உலகத் தலைவர்கள் இந்த அமர்வில் உலகத்தின் சமகால நிலையை மதிப்பிடுவது மட்டுமல்லாமல், பொது நலனுக்காக செயல்படுவதற்குரிய திடசங்கற்பத்தை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் அன்ரனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ஒற்றுமை
நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே இந்த ஆண்டுக்குரிய பொதுச்சபை அமர்வின் கருப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் பங்கேற்கும் உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அதன் பின்னர் எதிர்வரும் வியாழனன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.
நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் உக்ரைன் போர் குறித்து விவாதித்த நிலையில் நியூயோர்க்கில் இந்த நகர்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது
