உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பின் அரிய காட்சி
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் 'ராட்சத ஒர்க்கிட்' (Giant Orchid) தாவரத்தின் மலர்க்கொத்து ஒன்று, பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துள்ளது.
பேராதனை பூங்காவில் பூத்துள்ள ராட்சத ஒர்க்கிட் மலர்க்கொத்தைப் பார்வையிடுமாறு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.சி.பி. ஜெயவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி
தாவரவியல் ரீதியாக Grammatophyllum speciosum என அழைக்கப்படும் இந்த ராட்சத ஒர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவர இனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து தெரிவித்த பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஒர்க்கிட் பிரிவின் தலைவர் இரோஷனி அந்திராதி, பூங்காவிற்குள் இந்த ராட்சத ஒர்க்கிட் மலர் இனம் கடைசியாக 2010 ஆம் ஆண்டிலேயே பார்க்கக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போது பூத்துள்ள தாவரம் 2022 ஆம் ஆண்டில் நடப்பட்ட ஒன்றாகும். அந்த தாவரத்தில் முதல் முறையாகவே தற்போது பூக்கள் பூத்துள்ளன.
இவ்வாறான பூப்படைதல் மிகவும் அரிதாகவே நடக்கும் என்பதால், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்த மிகவும் அரிய வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராட்சத ஒர்க்கிட் தாவரம்
இந்த ஆர்க்கிட் தாவரம் முக்கியமாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.

முழுமையாக வளர்ந்த ஒரு ராட்சத ஒர்க்கிட் தாவரம் ஒரு தொன் (1000 கிலோகிராம்) வரை எடை கொண்டதாக இருப்பதுடன், 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய பூங்கொத்துகளைக் கொண்டிருக்கும்.
இந்த தாவரத்தில் பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கள் பூப்பதுடன், அதற்குச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலமைகளும் பலமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |