வவுனியாவில் இளைஞர் குழு மோதல் : ஒருவர் ஆபத்தான நிலையில்! மேலும் 4 பேருக்கு காயம்
வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றது.
இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது அப்பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிபகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதரர் மீதும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

இதனையடுத்து வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்த வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.