விஜேதாச எம்.பியை அச்சுறுத்தினாரா கோட்டாபய? விளக்கமளித்துள்ள அரசதரப்பு
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச தெரிவித்து கருத்து தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரிடம் பொதுவாகவே பேசினாரெனவும் அவரை அச்சுறுத்தவில்லை எனவும் அமைச்சர் மகிந்தானந்தே அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் சட்டபூர்வமானது. கொழும்பு துறைமுக நகரம் இலங்கைக்கு ஒரு திருப்புமுனையாகும், இது நாட்டை சிங்கப்பூருக்கு இணையான நிலைக்கு உயர்த்தும்.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்விஜேதாச ராஜபக்ஸ அறிவில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி அவருடன் இழிவான முறையில் பேசியதாக எம்.பி. தெரிவித்தமை உண்மைக்கு புறம்பானது. இது தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்க ஒரு பொது தொலைபேசி அழைப்பை மட்டுமே ஜனாதிபதி மேற்கொண்டார் எனத் தெரிவித்தார்.
இதேவேளை இன்றையதினம் எம்.பி. விஜேதாச ராஜபக்ஷ செய்தி ஊடகமொன்றிடம், இன்று காலை ஒரு தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி தன்னுடன் ஒரு தவறான மொழியில் பேசியதாகவும் இது ஒரு அரச தலைவருக்குப் பொருந்தாது என்றும் இதேபோன்ற மொழியில் ஜனாதிபதிக்கு பதிலளிப்பதைத் தவிர தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பலரில் எம்.பி. விஜேதாச ராஜபக்ஷவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.