நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார்
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆயிரம் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் இருவாரமும் நாளை செவ்வாய்க்கிழமை (07) முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு, அவற்றின் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 1,000 தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படவுள்ள அதேவேளை, நாளை ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரத்தின் முதற்கட்டமாக, இனங்காணப்பட்ட 100 தளங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
தொல்பொருள் தளங்கள்
தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு சமூக பாதுகாப்பு குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சமூக பாதுகாப்பு குழுக்களின் மூலம் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் நேரடித் தலையீட்டின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, ஜூலை மாதம் 7ஆம் திகதி தொல்பொருள் இருவாரம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை தொல்பொருள் இருவாரத்தின் முக்கிய கருப்பொருளாக 'பாரம்பரியத்திற்கு புத்துயிர்' என்பதை பெயரிட்டுள்ளோம்.
இதன் மூலம் நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டு, அவற்றுள் பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டிய இடங்களுக்கான பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக, எதிர்வரும் காலத்தில் 'பாரம்பரியத்திற்கு புத்துயிர்' 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் முதன்மை வேலைத்திட்டத்தின் கீழ் தான் இந்த நடவடிக்கை தொடங்கப்படுகிறது.
100 இடங்கள்
ஜூலை 7ஆம் திகதி ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரத்தின் தொடக்கப் பணியாக, அத்தகைய 100 இடங்களை இனங்கண்டு பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தத் தளங்கள் மீதான பொதுமக்களின் அர்ப்பணிப்பும் தலையீடும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாகவே இருப்பதை நாம் அவதானித்தோம்.

அந்த நிலையைக் கருத்திற்கொண்டு, தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டதும், அதனை ஒரு குறிப்பிட்ட தொல்பொருள் தளமாகப் பெயரிட்டு, அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் சமூக பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
இந்தச் சமூக பாதுகாப்பு குழுவின் மூலமே, அதற்குப் பிறகு அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி, ஆய்வு அல்லது பாதுகாப்புப் பணிகள் செய்ய வேண்டுமா என்பது குறித்த ஆலோசனைகளும் கருத்துகளும் பெறப்படும். இவை தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அறிவுடைய அதிகாரிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |