சீனாவின் எந்த அமைப்பும் குரங்குகளைக் கோரவில்லை - மறுத்துள்ள சீனா!
ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் கூறியுள்ளது.
இது தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களங்களான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவியதாகவும், அவர்கள் இதனை அறிந்திருக்கவில்லை என தெரிவித்ததாகவும் சீன தூதரகம் அறிவித்துள்ளது.
சீன தூதரக தகவல்
உலகளவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியான சீனா வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் மேலும் கூறியுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை கொடுப்பதாகவும், அதற்காக சர்வதேச கடமைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதாகவும் சீன தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
